×

கேரளாவில் பண தகராறில் க.காதலனை வெட்டி கொன்று பெண் தூக்கில் தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் காதலனை வெட்டி கொலை செய்துவிட்டு பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி அருகே பழேரி பகுதியை சேர்ந்தவர் குட்டப்பன். இவரது மனைவி சந்திரமதி (54). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு குட்டப்பன், சந்திரமதியை பிரிந்து சென்றார். இதனால் சந்திரமதி, தனது தாய் தேவகியுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சந்திரமதிக்கும், அருகில் உள்ள தொடுவெட்டி பகுதியை சேர்ந்த முகம்மது பீரான் (58) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. சந்திரமதியின் வீட்டுக்கு பீரான் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதையடுத்து இருவரும் இணைந்து பல்வேறு தொழில்களை செய்து வந்தனர். சமீபத்தில் ஒரு சரக்கு ஆட்டோவை வாங்கினர். இது தொடர்பாக பணத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை பீரான், வழக்கம்போல சந்திரமதியின் வீட்டுக்கு சென்றார். அப்போது தனது தாயை அருகில் உள்ள மாமாவின் வீட்டுக்கு சந்திரமதி அனுப்பி வைத்தார்.

பின்னர் இரவு, வீட்டுக்கு திரும்பினார் தேவகி. அப்போது, வீட்டின் பின்புறம் சந்திரமதி, தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்தார். உடலை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறினார். உடனே உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, படுக்கையறையில் பீரான் கழுத்தில் வெட்டுப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே இதுகுறித்து சுல்தான் பத்தேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பண தகராறு காரணமாக பீரானை கொலை செய்து விட்டு சந்திரமதி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

The post கேரளாவில் பண தகராறில் க.காதலனை வெட்டி கொன்று பெண் தூக்கில் தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Wayanad, Kerala ,
× RELATED சிபிஐ என்று கூறி தமிழ்நாடு, கேரளாவில் பல கோடி மோசடி: வாலிபர் கைது