×

தாயுடன் கள்ளக்காதலை கைவிடாத ரவுடி தலை துண்டித்து கொலை: தந்தை, 2 மகன்கள் கைது: வாலிபருக்கு வலை

திருவெறும்பூர்: திருச்சி அருகே தலை துண்டித்து ரவுடியை கொன்ற வழக்கில் தந்தை, 2 மகன்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்தது அம்பலமாகி உள்ளது. திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(எ)கழுத்துவெட்டி சுந்தர்ராஜ்(33). திருமணமாகாதவர். பிரபல ரவுடியான இவர் மீது, கொலை, அடிதடி உள்ளிட்ட 7 வழக்குகள் உள்ளது.

இவர் நேற்று காலை பக்கத்து வீட்டில் உள்ள அவரது சித்தப்பா மணி வீட்டின் மொட்டை மாடியில் கழுத்து துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது.இதுபற்றி போலீசார் கூறுகையில், ரவுடி சுந்தர்ராஜ் அதே பகுதியை சேர்ந்த கணேச மூர்த்தியின்(47) மகன்களான வடிவேல்(25) மற்றும் 17வயது சிறுவனுடன் பெயின்டிங் வேலைக்கு செல்வது வழக்கம். இவர்கள் சுந்தர்ராஜுடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்துவார்களாம்.

இந்நிலையில் கணேசமூர்த்தியின் தங்கை பரிமளாவுடன் சுந்தர்ராஜிக்கு கடந்த 4 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இதை கணேசமூர்த்தி, இவரது மகன்கள் மற்றும் பரிமளாவின் மகன் மாரிமுத்து(25) ஆகியோர் கண்டித்தனர். ஆனால் சுந்தர்ராஜ் கள்ளக்காதலை கைவிடவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் பரிமளாவுடன் ஏற்பட்ட தகராறில் அவரை சுந்தர்ராஜ் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வடிவேல், கணேசமூர்த்தி, மாரிமுத்து, 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரும் சேர்ந்து சுந்தர்ராஜை கொலை செய்ய திட்டமிட்டனர்.

அதன்படி நேற்றுமுன்தினம் இரவு சுந்தர்ராஜுடன் சேர்ந்து வடிவேல் மற்றும் இவரது தம்பி 17 வயது சிறுவன் ஆகியோர் மது அருந்தினர். சுந்தர்ராஜுக்கு போதை தலைக்கேறியது. அதன்பின் வடிவேலின் தந்தை கணேசமூர்த்தி மற்றும் பரிமளாவின் மகன் மாரிமுத்து ஆகியோர் அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டியும், கத்தியால் கழுத்தை அறுத்தும் தலையை துண்டித்து சுந்தர்ராஜை கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து வடிவேல், இவரது தம்பி 17 வயது சிறுவன், இவர்களது தந்தை கணேசமூர்த்தி ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். தலைமறைவான மாரிமுத்துவை தேடி வருகின்றனர்.

The post தாயுடன் கள்ளக்காதலை கைவிடாத ரவுடி தலை துண்டித்து கொலை: தந்தை, 2 மகன்கள் கைது: வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Thiruverumpur ,Trichy ,Panaiyakurichi Mariamman ,Tiruchi Thiruverumpur ,
× RELATED தலை துண்டித்து ரவுடி கொடூர கொலை: போதை நண்பர்கள் வெறிச்செயல்