உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்கினால் நாடு இன்னும் வேகமாக முன்னேறும்: பிரதமர் மோடி பேச்சு

டேராடூன்: டெல்லி முதல் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது டெல்லி -டேராடூன் பயண நேரத்தை 6 மணி நேரம் 10 நிமிடங்களில் இருந்து நான்கரை மணி நேரமாக குறைக்கும்.

வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி தொடர்ந்து பேசியதாவது:
இந்தியாவின் உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதன் மூலமாக நாடு இன்னும் வேகமாக முன்னேறும். நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்த கட்சிகள் இதனை உணரவில்லை. ஊழல் மற்றும் லஞ்சம் பெறுவதிலேயே அவர்களின் கவனம் இருந்தது. வாரிசு அரசியலின் கட்டுப்பாடுகளில் இருந்து அவர்களால் வெளியே வர முடியவில்லை. அதிவேக ரயில்கள் இயக்குவது குறித்தும் அவர்கள் உறுதி கூறினார்கள். ஆனால் பல ஆண்டுகள் சென்றது. எதுவும் நடக்கவில்லை.

முதல் முறையாக நாட்டில் வளர்ச்சி அடைவதற்கு தேவையான எண்ணம், கொள்கை மற்றும் அர்ப்பணிப்பு கொண்ட அரசு அமைந்துள்ளது. மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். உலக நாடுகள் இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றன. இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

சவால்களுக்கு சவால் விடுவேன் – பிரதமர்
மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் முடிந்து டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி பேசுகையில், ‘‘மூன்று நாடுகளில் ஆறு நாட்கள் சுற்றுப்பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் நாட்டின் நலனுக்காக பயன்படுத்தினேன். இந்தியா தனது வேர்களை வலுப்படுத்துவதற்கான சவால்களை எதிர்கொள்கிறது. அதே நேரத்தில் உலகம் எதிர்பார்க்கும் புதிய உச்சத்தை நோக்கி செல்கிறது. சவால்கள் பெரியவை. ஆனால் சவால்களுக்கு சவால் விடுவது எனது இயல்பிலேயே உள்ளது” என்றார்.

The post உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்கினால் நாடு இன்னும் வேகமாக முன்னேறும்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: