மண்வெட்டியால் அடித்து கணவர் கொடூர கொலை; மனைவி கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே குடும்பத் தகராறில் கணவனை மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கடைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சாஜு (44). அவரது மனைவி பிரியங்கா (38). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதன்படி பிரியங்கா அங்குள்ள ஆர்த்திங்கல் என்ற இடத்தில் 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அங்கு சென்று சாஜு அடிக்கடி பிரியங்காவுடன் தகராறு செய்வது வழக்கமாம். இது தொடர்பாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பிரியங்கா கடைக்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் அழைத்து சமரசமாக பேசி அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் நேற்று சாஜு மீண்டும் பிரியங்காவின் வீட்டுக்கு சென்றார். பின்னர் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த பிரியங்கா வீட்டில் இருந்த மண்வெட்டியை எடுத்து சாஜுவின் தலையில் பலமாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே சாஜு பரிதாபமாக இறந்தார். இதன் பின்னர் பிரியங்கா கடைக்கல் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து கணவனை கொலை செய்த விவரத்தை கூறினார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.பின்னர் சாஜுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பிரியங்காவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post மண்வெட்டியால் அடித்து கணவர் கொடூர கொலை; மனைவி கைது appeared first on Dinakaran.

Related Stories: