புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது, டோஹட் மாவட்டம் ராதிக்பூர் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணியான பில்கிஸ் பானு 11 பேர் கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருடைய 3 வயது குழந்தை உள்பட 14 பேரை அந்த கும்பல் எரித்து கொன்றது. இந்த வழக்கில் கைதாகி 15 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த 11 குற்றவாளிகளையும் குஜராத் அரசு கருணை அடிப்படையில் கடந்தாண்டு சுதந்திர தினத்தன்று விடுவித்தது. இதனை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் கூறுகையில், ஒரு கர்ப்பிணி பெண் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சிலர் கொல்லபட்டுள்ளனர். இந்த வழக்கையும் பிற வழக்கையும் ஒப்பிட முடியாது. கூட்டு பலாத்காரம், படுகொலையை ஒற்றை கொலையுடன் ஒப்பிட முடியாது. குற்றவாளிகள் சமூகம் மற்றும் சமுதாயத்திற்கு எதிராக குற்றம் செய்துள்ளனர். குற்றவாளிகளை விடுதலை செய்யும் மாநில முடிவு எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பது தான் கேள்வி.
இன்று பில்கிஸ் பானு நாளை யாராகவும் இருக்கலாம். நீங்களாகவும் இருக்கலாம் நானாகவும் இருக்கலாம். குற்றவாளிகளை எதன் அடிப்படையில் விடுதலை செய்தீர்கள் என்ற ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்றால் நீதிமன்றம் தாமாக முடிவு எடுக்கும்’ என்றார். பின்னர் இந்த வழக்கை மே 2ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இதற்கு பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்ததற்கான ஆவணங்களை ஒப்படைக்க கோரிய உச்ச நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய உள்ளதாக குஜராத், ஒன்றிய அரசுகள் நீதிமன்றத்தில் தெரிவித்தன.
The post பில்கிஸ் பானு வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய குஜராத், ஒன்றிய அரசு கோரிக்கை appeared first on Dinakaran.