வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் திமுகவினர் மும்முரமாக ஈடுபடவேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் திமுகவினர் மும்முரமாக ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வருகின்ற 1.1.2024ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் கீழ்க்காணும் அட்டவணைபடி அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 2023ம் ஆண்டு சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திடும் பணி வாக்குச்சாவடி நிலை அலுவலரால் வீட்டுக்கு வீடு சரிபார்ப்பு பணி 21.7.2023 வெள்ளி முதல் 21.8.2023 திங்கள் வரை நடைபெறவுள்ளது.

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2024ன்போது கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் அளிக்க அனுமதிக்கப்பட்ட 17.10.2023 முதல் 30.11.2023 வரையுள்ள காலத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம் செய்யவோ, திருத்தங்கள் செய்யவோ, இடமாற்றம் செய்யவோ அல்லது ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர், தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6, 6-பி, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து கீழ்க்கண்டவாறு அளிக்கலாம். அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம்.

முகவரிக்கான நீர், மின்சாரம், கேஸ் இணைப்பு ரசீது ஆதார் அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட அட்டை வகைப்படுத்தப்பட்ட வங்கி, அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம், பாஸ்போர்ட், விவசாயி புத்தகம் உட்பட வருவாய்த்துறைகளின் நில உரிமைப்பதிவுகள். வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் வாக்காளரின் புகைப்படங்களின் தரத்தை மேம்படுத்தும் விதமாக விண்ணப்பதாரர்கள் தரமான புகைப்படங்களை அளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். www.voters.eci.gov.in மற்றும் https://voterportal.eci.gov.in என்ற இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி கைபேசி செயலி மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். அதனடிப்படையில் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம்தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்துள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும், தீவிர நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

மேற்கண்ட நாட்களில் நடைபெறும் வாக்காளர் சேர்ப்பு பணியில் மற்றும் சிறப்பு முகாம்களில் மாவட்ட நிர்வாகிகள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் முன்னாள், இந்நாள், சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக சார்பு அணிகளின் நிர்வாகிகள் முழுமையாக தங்களை ஈடுபடுத்தி கொண்டு பணி விவரத்தை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் திமுகவினர் மும்முரமாக ஈடுபடவேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: