பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் தொடர்பாக, புதிதாக விசாரணை : லஞ்ச ஒழிப்புத் துறை தகவல்!!

சென்னை : முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான முறைகேடு புகார் தொடர்பாக புதிதாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ. 4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்தது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மீது சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக்கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி 2018ல் உத்தரவிட்டு இருந்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்ததுடன் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி இருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என ஆர்.எஸ். பாரதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு பழனிசாமி மீது குற்றமில்லை என கடந்த 2018ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் ஆணையர் ஏற்கவில்லை என்றும் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்படாத நிலையில், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை படிக்காமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாகவும் அதனால் 2018ம் ஆண்டு ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட எடப்பாடி தரப்பு, மனுவை திரும்பப் பெற அனுமதிக்கக்கூடாது என்று வாதிட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விசாரணையை ஜூலை 13ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

The post பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் தொடர்பாக, புதிதாக விசாரணை : லஞ்ச ஒழிப்புத் துறை தகவல்!! appeared first on Dinakaran.

Related Stories: