திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு: மே மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த திட்டமா?

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த 6ம் தேதி காலமானார். இதனால் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தலைமை தேர்தல் அதிகாரி விரைவில் தகவல் அனுப்பி வைப்பார். அதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தொகுதி காலியானால் அடுத்த ஆறு மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்பது விதிமுறை. எனவே நாடாளுமன்ற தேர்தலின் 6வது அல்லது 7வது கட்டத்தில் (மே மாதத்திற்குள்) விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, “விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்து அறிவிக்கும்” என்றார்.

The post திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு: மே மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த திட்டமா? appeared first on Dinakaran.

Related Stories: