×

மாநகர பேருந்தில் சீட் பிடிப்பதில் தகராறு; பெண் சாப்ட்வேர் இன்ஜினியரை சரமாரியாக தாக்கிய தாய், மகள்

தாம்பரம்: தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு நேற்று மாலை மாநகர பேருந்து (தடம் எண்: 500) புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை, கைக்குழந்தையுடன் வந்த ஒரு பெண்ணும், அவரது தாயும் திடீரென சரமாரியாக தாக்கி உள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகளில் ஒரு பெண் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு பெண்களிடம் தட்டிக்கேட்டுள்ளார். அவரையும் அந்த இரண்டு பெண்களும் தாக்கி உள்ளனர். இதனால் பேருந்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரும்புலியூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை டிரைவர் நிறுத்தி தகராறில் ஈடுபட்ட பெண்களை கீழே இறக்கி உள்ளார். அப்போது தாக்குதலுக்கு உள்ளான மேற்குவங்கத்தை சேர்ந்த பெண் கதறி அழுதுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுரேஷ் என்பவர், தாக்குதலுக்கு ஆளான பெண்ணுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து ஆறுதல் கூறி விசாரணை நடத்தியுள்ளார். தாக்கப்பட்ட அந்த பெண், தான் மேற்குவங்கத்தை சேர்ந்தவர் எனவும் மேடவாக்கம் பகுதியில் தங்கி பெருங்களத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருவதாகவும், கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் பேருந்தில் ஏறி உட்கார்ந்த சில நிமிடங்களில் அந்த இரண்டு பெண்களும் அங்கு வந்து சீட்டில் துண்டு போட்டு பிடித்ததாகவும், தன்னை அங்கிருந்து எழுந்து செல்லும்படி கூறியதாகவும் அதற்கு மறுத்ததால் குழந்தையை இடித்து விட்டாய் என கூறி கழுத்தை நெரித்து, தலைமுடியை இழுத்து, காலால் எட்டி உதைத்து தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து போக்குவரத்து உதவியாளர் சுரேஷ் சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்து தாக்குதலுக்கு உள்ளான பெண் மற்றும் அவரை தாக்கிய இரண்டு பெண்கள் என மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைத்தார். அங்கு ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம் விசாரணை நடத்தி தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அந்த பெண்ணை தாக்கிய இரண்டு பெண்களும் கைக்குழந்தையுடன் இருந்ததால் இன்று காலை 10 மணிக்கு காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வர வேண்டும் என கூறி அனுப்பி வைத்தார்.

The post மாநகர பேருந்தில் சீட் பிடிப்பதில் தகராறு; பெண் சாப்ட்வேர் இன்ஜினியரை சரமாரியாக தாக்கிய தாய், மகள் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Chengalpattu ,West Bengal ,Dinakaran ,
× RELATED கிழக்கு தாம்பரத்தில் நாட்டு...