×

மாநகர பஸ்சில் ஆபத்தான பயணம்: மாணவர்கள், டிரைவர் திடீர் வாக்குவாதம்

பூந்தமல்லி: பூந்தமல்லியில் இருந்து குன்றத்தூர் வழியாக செல்லும் மாநகர பேருந்துகளில், பூந்தமல்லி அரசு பள்ளி மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடி செல்வதாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து காலை மற்றும் மாலை நேரங்களில் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் அந்தப் பகுதியில் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று குன்றத்தூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி வந்த மாநகர பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களுக்கும், பேருந்தை இயக்கிய டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி அருகே வந்த போது பள்ளி மாணவர்களை டிரைவர் அடித்ததாக கூறப்படுகிறது‌. இதனால் டிரைவருக்கும் பள்ளி மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்துமாறு கூறினார். இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களை தனியாக அழைத்து அறிவுரை கூறினார். அப்போது ஒரு பள்ளி மாணவன், நிறுத்தத்தில் பேருந்து நிற்கவில்லை, டிரைவர் தன்னை அடித்து விட்டதாக புகார் தெரிவித்தார்.

இதையடுத்து மாணவர்களுக்கு அறிவுரை கூறிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கோபப்படக்கூடாது, வயதிற்கு மரியாதை கொடுக்க வேண்டும் எனவும் பேருந்தில் பயணம் செய்த போது தவறி யார் விழுந்து இறந்தாலும் அது டிரைவரை தான் பாதிக்கும் என அறிவுரை கூறினார். பின்னர் மாணவர்கள் வந்த பேருந்தை அனுப்பி வைத்துவிட்டு பின்னால் காலியாக வந்த மற்றொரு மாநகர பேருந்தில் மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி, போரூர், அய்யப்பன்தாங்கல் பகுதிகளில் பேருந்து படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை கண்காணிக்கும் பணியை போக்குவரத்து போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

The post மாநகர பஸ்சில் ஆபத்தான பயணம்: மாணவர்கள், டிரைவர் திடீர் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Poontamalli government school ,Kunradthur ,
× RELATED மருத்துவரின் அறிவுரையை மீறி மது குடித்தவர் பலி