அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்பிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல: சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பு வாதம்

சென்னை: அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி மற்றும் திமுக எம்.பி அ.ராசா ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட கோவாரண்டோ வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று திமுக சார்பில தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து முன்னணி நிர்வாகி கிஷோர் குமார் என்பவர் தாக்கல் செய்த கோவாரண்டோ மனுக்களில், சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் சனாதானம் என்பது டெங்கு, மலேரியா போன்றது என்றும் அதை ஒழிக்க வேண்டுமென்றும் அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்.

இந்த மாநாட்டில் அமைச்சர் சேகர் பாபுவும் பங்கேற்றுள்ளார். திமுக எம்.பி ராசாவும் சானாதானத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். இதனால் இவர்கள் மூவரும் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் உதயநிதி மற்றும் திமுக எம்.பி.ராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. அவர்களின் நியமனம் எந்த சட்டத்திற்கும் எதிரானது அல்ல என்பதால் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. அவர்கள் எந்த விதிமுறை மீறல்களிலும் ஈடுபடவில்லை. அவர்களின் பேச்சு விவரங்கள் மனுவில் தெரிவிக்கப்படவில்லை. அரசியல் காரணத்துக்காக நீதிமன்றத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று வாதிட்டார்.

அமைச்சர் சேகர்பாபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜோதி, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர்களின் பேச்சு அல்லது வீடியோ குறித்த விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. வழக்கு என்பது இரு நீதிபதிகள் அமர்வில் தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. அ.ராசா ஆகியோரது பேச்சு குறித்த ஆதாரங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

The post அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்பிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல: சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பு வாதம் appeared first on Dinakaran.

Related Stories: