×

சுடுகாடு ஆக்கிரமிப்பு கண்டித்து அரசு பேருந்து சிறைபிடிப்பு

பள்ளிப்பட்டு: சுடுகாடு இடத்தை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறையினரை கண்டித்து, அரசு பேருந்தை பெண்கள் சிறை பிடித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆர்.கே.பேட்டை அருகே அம்மனேரி ஊராட்சி ஒட்டர் காலனியில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு அருகில் உள்ள சுடுகாட்டு நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து பொக்லைன் மூலம் சமன் செய்து வருவதாக கிராம மக்கள் சார்பில் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் 30க்கும் மேற்பட்டோர் சோளிங்கர் -திருத்தணி நெடுஞ்சாலை அம்மனேரி அருகே அரசுப் பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுடுகாட்டு இடத்தை ஆக்கிரமித்தவர் மீது வட்டாட்சியரிடம் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து, சுமார் அரைமணி நேரம் நடந்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

The post சுடுகாடு ஆக்கிரமிப்பு கண்டித்து அரசு பேருந்து சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Pallipattu ,
× RELATED பொதட்டூர்பேட்டை பகுதியில்...