முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் 31,008 அரசு பள்ளிகளில் 18.54 லட்சம் மாணவ, மாணவிகள் சூடான, சுவையான காலை உணவை உண்டு மகிழ்ச்சியுடன் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். காலை உணவு உண்ணாமல் பள்ளி செல்லும் குழந்தைகளை எண்ணி கவலை கொண்டிருந்த தாய்மார்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர். இந்த திட்டத்தை, தெலங்கானா மாநில அரசு உட்பட பல்வேறு மாநிலங்கள் வரவேற்றுள்ளன. மேலும், கனடா நாட்டு பிரதமர் இத்திட்டத்தை வரவேற்று தம்முடைய நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளார்.
நான் முதல்வன்: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் அடிப்படை நோக்கம் கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதில் உள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களில் 76.4% இன்ஜினியரீங் மாணவர்களும், 83.8% கலை மற்றும் அறிவியல் மாணவர்களும் தொடர்ந்து வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் 1,48,149 இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் இளைஞர்களிடமும் பெற்றோர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன் வீடுகட்டுவதற்கான தொகையை அரசு அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தி பயனாளிகளே தங்கள் கனவு இல்லங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய இந்த 3 திட்டங்களையும் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு மக்களின் ஆதரவை பெற்று மாபெரும் வெற்றிகண்டுள்ளது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
* உமா குமரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள உமா குமரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘‘பிரிட்டனின் ’ஸ்ட்ராட்ஃபோர்ட் அன்ட் போ’ நாடாளுமன்றத் தொகுதியின் முதல் உறுப்பினரும், பிரிட்டானிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள முதல் தமிழ்ப் பெண்மணியுமாகிய உமா குமரனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தமிழர்களுக்குத் தாங்கள் மிகப்பெரும் பெருமையைத் தேடித் தந்துள்ளீர்கள்’’ என கூறியுள்ளார்.
The post காலை உணவு திட்டம், நான் முதல்வன் உள்ளிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டங்களை பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு மாபெரும் வெற்றிகண்டுள்ளது: தமிழ்நாடு அரசு பெருமிதம் appeared first on Dinakaran.