பா.ஜவுடன் கூட்டணி சேர்ந்த விவகாரம்: அகிலேஷ்யாதவுடன் மோதும் ஜெயந்த்

முசாபர்நகர்: பா.ஜவுடன் கூட்டணி சேர்ந்த விவகாரம் தொடர்பாக அகிலேஷ்யாதவுடன் நேரடியாக ஜெயந்த் சிங் மோதலில் ஈடுபட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் இருந்த ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சிக்கு 7 தொகுதிகளை சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ் ஒதுக்கினார். ஆனால் ஜெயந்த்சிங் தாத்தா சரண்சிங்கிற்கு பாரதரத்னா விருது வழங்கி அவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ இழுத்துக்கொண்டது. இதனால் அதிருப்தி அடைந்த அகிலேஷ், சமீபத்தில் பிரதமர் மோடியுடன், ஜெயந்த்சிங் கலந்து கொண்ட பிரசார கூட்டம் பற்றி குறிப்பிடுகையில்,’ இப்படி அடிக்கடி இடம் மாறும் நபர் யார் என்று மோடி கேட்க வாய்ப்பு உள்ளது?’ என்றார்.

இதனால் ஜெயந்த்சிங் கோபம் அடைந்தார். அகிலேஷ் யாதவ் பெயரைக் குறிப்பிடாமல் ஜெயந்த் சிங் கூறுகையில், ‘முன்னாள் முதல்வர் ஒருவரின் பேச்சுபற்றி நான் கேள்விப்பட்டேன். அவரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் தான். இதுவரை அவரைப்பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. அவர் வேண்டுமானால் எதுவும் பேசட்டும். எனக்கு கவலை இல்லை, ஆனால் நான் உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் இனிமேல் திரும்பி அவர்கள் பக்கம் செல்லாத வகையில் நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும். அவர்களுக்கு தோல்வியைக் கொடுக்க வேண்டும். அவருக்கு (அகிலேஷ்) மல்யுத்தம் பற்றி கொஞ்சம் தெரியும். எனக்கும் கொஞ்சம் தெரியும்’ என்று தெரிவித்தார்.

The post பா.ஜவுடன் கூட்டணி சேர்ந்த விவகாரம்: அகிலேஷ்யாதவுடன் மோதும் ஜெயந்த் appeared first on Dinakaran.

Related Stories: