அத்திக்கடவு – அவிநாசி திட்டம்; பாஜக போராட்டம் கைவிடப்படுகிறது: அண்ணாமலை அறிவிப்பு!

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளம் பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2021ம் ஆண்டு கொண்டு வந்த தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டம், ஒவ்வொரு மாநிலமும், அணைகள் பாதுகாப்புக் குழுவை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது. தமிழகத்தில் பவானிசாகர், ஆழியாறு, திருமூர்த்தி அணை, அமராவதி அணை உள்ளிட்ட பல்வேறு அணைகள், போதிய பராமரிப்பின்றி இருக்கின்றன.

அணைகளைப் பராமரிப்பதும், பாதுகாத்துக் கண்காணிப்பதும்தான் இந்தக் குழுவின் தலையாய பணி. ஆனால், தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றி மூன்று ஆண்டுகள் கடந்தும், திமுக அரசு, இதுவரை, தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்கவில்லை. இனியும் தாமதிக்காமல், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும்.

இதன் மூலம், தமிழக அணைகள் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளோம். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றத் தவறினால், வரும் ஆகஸ்ட் 20 முதல், தமிழக பாஜக சார்பில், தொடர் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம்.

தற்போது, ஆகஸ்ட் 17 அன்று(நாளை), திட்டத்தைத் தொடங்கி வைப்பதாகத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. எங்கள் முக்கியக் கோரிக்கை நிறைவேறியிருப்பதால், தமிழக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் கைவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post அத்திக்கடவு – அவிநாசி திட்டம்; பாஜக போராட்டம் கைவிடப்படுகிறது: அண்ணாமலை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: