அபுதாபியில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு செல்ல கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு

டெல்லி : அபுதாபியில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு செல்ல கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. நாட்டிலேயே கேரளாவில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் அவ்வப்போது ஒன்றிய அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதனிடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் வரும் 8ம் தேதி முதல் 10 ம் தேதி வரை முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஐக்கிய அரசு அமீகரத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்த அழைப்பை ஏற்று ஐக்கிய அரபு அமீரகம் செல்ல ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் பினராயி விஜயன் முறைப்படி அனுமதி கோரியிருந்தார். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு முதலில் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. ஆனால், முதல்வர் கலந்து கொள்ளும் அளவிற்கு இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு அல்ல என்று கூறி வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்திடம் கேரள முதல்வர் அலுவலகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சக முடிவில் தலையிட முடியாது எனக் கூறி பிரதமர் அலுவலகமும் மறுத்து விட்டது. இதனால், முதல்வர் தனது திட்டத்தை ரத்து செய்தார். முதல்வர் பினராயி விஜயனுக்கு பதிலாக தலைமை செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழு ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறது.

The post அபுதாபியில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு செல்ல கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: