சென்னை: ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு என 204 புறநகர் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இதில், பெண்கள், தேர்வுக்கு செல்பவர்கள், மாணவர்கள், வியாபாரம் செய்யும் பெண்கள் என அனைவரும் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நிவர் புயல் காரணமாக பயணிகள் ரயில்கள், புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. புயல் பாதிப்பு இல்லாத மாவட்டங்களுக்கு ஒரு சில ரயில்கள் இயக்கப்பட்டன. அதன்படி, நேற்று முன்தினம் காலை 10 மணி வரைக்கும் சில மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால், அதில் வழக்கத்திற்கு மாறாக பயணிகள் கூட்டம் இல்லை. இந்நிலையில், நிவர் புயல் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மரக்காணம் - புதுச்சேரி இடையே கரையை கடந்ததால் நேற்று வழக்கம் போல் 3 மணி நேரத்திற்கு பிறகு மின்சார ரயில்கள் இயக்கப்படும், என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.