வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று 902 மையங்களில் சிறப்பு முகாம்

சென்னை: மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் 1.1.2021ம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 2021ம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16.11.2020 அன்று வெளியிடப்பட்டடது.  மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4,5,6,8,9,10,13 மற்றும் வாக்கு சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்பத்தார்களது பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ளவேண்டும். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2021 அன்று 18 வயது நிறைவு அடைகின்றவர்கள் (1.1.2003ம் தேதிக்கு முன்பிறந்தவர்கள்) படிவம் 6-ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.

பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8ஏ-ஐ பூர்த்தி செய்தும் அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 15.12.2020 காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.மேலும்,  21.11.2020, 22.11.2020, 12.12.2020 மற்றும் 13.12.2020 ஆகிய தினங்களில் சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 3,754 வாக்குச்சாவடிகள் அடங்கிய 902  வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: