கிருஷ்ணகிரி, அக்.28:கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித்தலைவர் சுப்பிரமணியன், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக, 2017 முதல் இருந்து வருகிறேன். என்னுடைய தாயார் 2019லும், தந்தை கடந்த ஜனவரி மாதமும் இறந்தனர். இதனால், வாரிசு சான்று வேண்டி கடந்த ஏப்ரல் 14ம் தேதி விண்ணப்பித்தேன். மிட்டள்ளி விஏஓ., தங்கராஜ் வாரிசு சான்று வழங்க, ₹1 லட்சம் லஞ்சம் கேட்டார். நான் பணம் கொடுக்காததால், கடந்த ஆகஸ்ட் மாதம் எனது மனு நிராகரிக்கப்பட்டது. மீண்டும் நேரில் சென்று கேட்ட போது, பணம் கொடுத்தால் மட்டுமே வாரிசு சான்று வழங்கப்படும் என்று கூறிவிட்டார். பின்னர், மீண்டும் கடந்த செப்டம்பர் 1ம் தேதி விண்ணப்பித்தேன். தற்போது தாசில்தாரிடம் விண்ணப்பம் உள்ளது.