முத்துப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி முதியவர் சாவு

திருத்துறைப்பூண்டி, அக்.18: முத்துப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் காயமடைந்தனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் ஊராட்சி மேலப்பெருமழை சாலை அருகே வேதாரண்யம் - முத்துப்பேட்டை சாலை ஓரத்தில் சுமார் 3 தலைமுறைகளாக இடமின்றி நரிக்குறவர்கள் மற்றும் மாற்று சமூகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த இடத்தில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு போராடங்கள் நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாரியம்மன் பூஜை செய்வதற்கு ஒரு நரிக்குறவர் வீட்டிலிருந்து மின்சாரம் எடுத்துள்ளனர். நேற்று காலை மின்சாரம் கசிவு ஏற்பட்டு அருகாமையில் இருந்த கம்பி வேலியில் வயர் விழுந்துமின் கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் தாக்கி நரி குறவர் தனபால் (65) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மேலும் சாலையோரத்தில் குடிசை வீடுகளில் வசித்து வந்த மாற்று சமூகத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சார்ந்த வேதநாயகி (7), வீரம்மாள் (50), செல்லம்மாள் (60), மாரியம்மாள் (35) உள்ளிட்ட 9 பேரில் 5 பேர் இடும்பாவனம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திருப்பினர். மேலும் படுகாயம் அடைந்த மாற்று சமூகத்தை சேர்ந்த 4 பேர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்தை திருத்துறைப்பூண்டி தாசிதார் ஜெகதீசன், ஆர்.ஐ ரவி, விஏஓ செந்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும், சம்பவம் குறித்து முத்துப்பேட்டை போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: