செண்பகத்தோப்பில் காட்டுயானைகள் முகாம் பலா வேட்டையால் பதறும் விவசாயிகள்

திருவில்லிபுத்தூர், மார்ச் 18: திருவில்லிபுத்தூர் அருகே தோப்பிற்குள் புகுந்த காட்டுயானைகள் பலா மரங்களை நாசம் செய்தன. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான காட்டுயானைகள் உள்ளன. இவை அடிவார பகுதியில் இறங்கி தோப்புகளில் உள்ள மரங்களை அடிக்கடி நாசம் செய்து வருகின்றன. தற்போது அடிவார பகுதியில் பலா மரங்களில் காய்கள் காய்த்து தொங்குகின்றன. இதனை பதம் பார்ப்பதற்காக கடந்த சில நாட்களாக யானைக் கூட்டம் ஒன்று அடிவார பகுதியில் முகாமிட்டுள்ளது.

இரவு நேரங்களில் தோப்பிற்குள் புகுந்து, மரங்களின் கிளைகளை ஒடித்தும், பலா காய்களை சேதப்படுத்தியும் வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். விவசாயிகள் கூறுகையில், ‘‘பலா மரங்கள் தற்போதுதான்  காய்க்க தொடங்கியுள்ளன. அதற்குள் யானைகள் நாசம் செய்துவிட்டன. யானைகளிடம் இருந்து பலா மரங்களை எப்படி காப்பாற்ற போகிறோம் என தெரியவில்லை. வனத்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: