ஓசூர், மார்ச் 17:ஓசூரில் நடந்த கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு கூட்டத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் பங்கேற்றனர். ஓசூர் மாநகராட்சி கூட்ட அரங்கில், நேற்று மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில், கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகம், தங்கும் விடுதி உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், மருத்துவமனை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்கு கை கழுவுதல் மற்றும் மருந்து கலந்து தெளிக்கும் முறை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொது மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். இதை தொடர்ந்துபஸ் நிலையம், ஜூஜூவாடி எல்லை, ஆர்டிஓ சோதனை சாவடிகளில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மருத்துவ அலுவலர் திலக், நகர அமைப்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.