கிருஷ்ணகிரி, மார்ச் 13: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரவிழா தொடங்கியது. கிருஷ்ணகிரியில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரவிழா வரும் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்தும் நோக்கில் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 1956ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி நினைவு கூறும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா வரும் 17ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது. அதில் கணினித் தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் அம்மா மென்தமிழ் -தமிழ்ச் சொல்லாளர் ஒருங்குறி பயன்பாடு குறித்தப் பயிற்சியும், ஆட்சிமொழி மின்காட்சியுரை குறித்த பயிற்சியும், தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.