கிருஷ்ணகிரி, மார்ச் 13: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் வளர்ச்சித் துறையில், தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் “தமிழ்ச் செம்மல்” என்ற விருது வழங்கப்படுகிறது. அதன்படி மாவட்டத்திற்கு ஒருவர் வீதம், 32 மாவட்டங்களில் இருந்து 32 பேரைத் தேர்வு செய்து, தமிழ்ச்செம்மல் விருது பெறுபவர்களுக்கு ₹25 ஆயிரம் பரிசுத்தொகையும், தகுதியுரையும் 2015ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு, மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து, அவர்களிடமிருந்து தன் விவரக் குறிப்புகளுடன் விண்ணப்பங்களை பெற்று, அதில் தகுதியானவர்களின் விண்ணப்பங்களை தொகுத்து அனுப்புமாறு, சென்னைத் தமிழ் வளர்ச்சி இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.