போச்சம்பள்ளி, மார்ச் 13: கொரோனா பீதியால் போச்சம்பள்ளி பகுதியில் 100க்கும் மேற்பட்ட சில்லி சிக்கன் கடைகள் மூடப்பட்டதால், ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நூற்றுக்கணக்கான கறிக்கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கோழிகளை, வெளி மாவட்ட வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்கின்றனர். மேலும், உள்ளூர் வியாபாரிகளும் சில்லரையில் வாங்கிச் சென்று சிக்கன் கடை மற்றும் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார்கள். போச்சம்பள்ளி பகுதியில் 50க்கும் மேற்பட்ட சிக்கன் கடைகள் உள்ளன. மேலும், மாலை நேரங்களில் சாலையோரம் 100க்கும் மேற்பட்ட சில்லி சிக்கன் கடைகள் அணிவகுப்பது வாடிக்கை. இந்நிலையில், கோழி இறைச்சி மூலம் கொரோனா பரவுவதாக வதந்தி பரவியதால், விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால், ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.