தர்மபுரி, மார்ச் 12: தக்காளி விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தக்காளி சாகுபடியாளர்களுக்கு, ஏக்கருக்கு குறைந்த பட்சமாக ₹25 ஆயிரம் இழப்பீட்டை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின், மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நேற்று தர்மபுரியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாதையன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரதாபன், டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி வரும் 20ம் தேதி நடைபெறும் பேரணி குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் டெல்லி நாடளுமன்றத்தி நோக்கி நடைபெறும் பேரணியில், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்ள வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள், விலை குறைவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பாதிக்கப்பட்டுள்ள தக்காளி சாகுபடியாளர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் ஏக்கருக்கு குறைந்த பட்சமாக ₹25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.