வி.கே.புரத்தில் மாநில கபடி போட்டி

வி.கே.புரம், மார்ச் 10: வி.கே.புரத்தில் வருகிற ஏப்.24 மற்றும் 25ம் தேதிகளில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டி நடக்கிறது. வி.கே.புரம் பொதிகை கபடி கழகம் சார்பில் வி.கே.புரம் பிஎல்டபிள்யுஏ பள்ளி மைதானத்தில் மாநில அளவிலான 2ம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டி, வருகிற ஏப்.24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. ஆண்களுக்கான போட்டியில் முதல் பரிசு ரூ.1 லட்சம், 2வது பரிசு ரூ.80 ஆயிரம், 3வது பரிசு ரூ.50 ஆயிரம், 4வது பரிசாக ரூ.40 ஆயிரம், ஆறுதல் பரிசாக 5, 6, 7 மற்றும் 8வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இதேபோல் பெண்கள் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.30 ஆயிரம், 2வது பரிசு ரூ.25 ஆயிரம், 3வது பரிசு ரூ.20 ஆயிரம், 4வது பரிசாக ரூ.15 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசாக 5, 6, 7, 8வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த போட்டிகளுக்கான அலுவலக திறப்பு விழா, வி.கே.புரம் வடக்குத்தெருவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கபடி முருகன் தலைமை வகித்தார்.  கண்ணன், ஸ்டீபன் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கந்தசாமி வரவேற்றார். அலுவலகத்தை ரமேஷ் திறந்து வைத்தார். இதில் வைகுண்டமணி, மாரியப்பன், முத்துராமலிங்கம், வல்சகுமார், பினு, ஆரோக்கியராஜ் மற்றும் கபடி வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: