சென்னை: சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்களை அதிகம் ஈர்ப்பது வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இங்கு பல்வேறு விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் இயற்கை பாதுகாப்போடு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் விடுமுறை விடப்படுகிறது. வண்டலூர் பூங்கா மிகவும் பெரியது என்பதால் சைக்கிள் மூலம் சுற்றிப்பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனி வாகனங்கள் மூலம் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டு எருமை, மான் உள்ளிட்ட விலங்குகளை அருகிலேயே சென்று பார்க்கவும் சிறப்பு கட்டணத்துடன் கூடிய வாகன வசதியும் உள்ளது.