கடையம்,பிப்.20: கடையத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி சாலை பள்ளமாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடையம், முதலியார்பட்டி, திருமலையப்பபுரம், பொட்டல்புதூர் வழியாக தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு தாமிர பரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ராட்சத குழாய் வழியாக குடிநீர் விநியோகம் செய்யபட்டு வருகிறது. கடையம் மெயின் ரோட்டில் இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக குடிநீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடி கழிவு நீரோடையில் கலக்கிறது. குடிநீர் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் அடுத்தடுத்து பள்ளங்கள் உருவாகி வருகிறது. இதில் இருசக்கர வாகனங்கள் செல்லும் போது நிலை தடுமாறி விழுகின்றன. பஸ், லாரி ஆகிய கனரக வாகனங்கள் செல்லும் போது உடைப்பு பள்ளத்தில் விழுந்து தண்ணீர் கடை மற்றும் பொதுமக்கள் மீது தெறிப்பதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.