புழல் திருமூலநாதர் கோயில் தெப்பத்திருவிழா கோலாகலம்

புழல்: புழல் பகுதியில் உள்ள திருமூலநாதர் கோயிலில் தெப்பத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  சென்னை புழல், காந்தி பிரதான சாலையில் தமிழக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சொர்ணாம்பிகை சமேத திருமூலநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் பிரமோற்சவ பெருவிழா, கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து, நாள்தோறும் திருமூலநாதர் மற்றும் சொர்ணாம்பிகைக்கு பல்வேறு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இக்கோயில் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக தீர்த்தவாரி மற்றும் தீபம் ஏற்றும் விழாவும் சாமி வீதியுலாவும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலைத்துறை நிர்வாக செயலாளர் குமரேசன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் விஜயன், ஆன்மிக மற்றும் மகளிர் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: