சிவகாசி, பிப். 18: வெயில் காலம் துவங்கியுள்ளதால் வெம்பக்கோட்டை அணையின் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. தற்போது அணையில் 1 மீட்டருக்கும் குறைவான தண்ணீர் மட்டுமே உள்ளது. சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 7.5 மீட்டர் ஆகும். இந்த அணை நீரை பயன்படுத்தி வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைபட்டி, கரிசல்குளம், சல்வார்பட்டி, ஏழாயிரம்பண்ணை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 8 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதவிர அணையில் இருந்து சிவகாசி நகராட்சி பகுதிக்கு தினமும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் எடுத்துச்செல்லப்படுகிறது. அணையை சற்றியுள்ள கிராம பகுதி கிணற்று பாசன விவசாயத்திற்கும் நிலத்தடி நீர் ஆதாரமாக அணை நீர் உள்ளது. வடகிழக்கு பருவ மழையால் அணைக்கு 4 மீட்டர் வரை தண்ணீர் வந்தது. இதன் பின்னர் போதிய மழை பெய்யவில்லை. இதனால் அணை நீர்மட்டம் குறைய தொடங்கியது. இதனால் விவசாய பணிகள் பாதிப்படைந்தது. தற்போது கோடை காலம் முன் கூட்டியே தொடங்கியுள்ளதால் கடுமையான வெயில் நிலவி வருகிறது.