சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட போவதாக கிடைத்த தகவலையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி கடந்த 14ம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு தடியடி நடத்தப்பட்டது. இதை கண்டித்து மாநிலம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை எங்களது காத்திருப்புப் போராட்டம் தொடரும் என்று இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன. அவர்களுடன் அமைச்சர் ஜெயக்குமார், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தொடர்ந்து போராட்டம் நடக்கிறது.