×

கோயில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் 2 பவுன் தாலிக்கொடி கொள்ளை

சேலம், பிப்.17: சேலத்தில் கோயில் பூட்டை உடைத்து, அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தாலி கொடியை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் அம்மாப்பேட்டை முனியப்பன் கோயில் தெருவில், வீரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் லோகநாதன்(68) என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் கடந்த 14ம் தேதி இரவு, வழக்கம்போல் பூஜை முடிந்தவுடன் கோயிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை மீண்டும் வந்து பார்த்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த லோகநாதன், உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள், அதன் பதிவுகள் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தாலி கொடி ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், அம்மாபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கோயிலில் கடந்த ஒரு மாதத்திற்கு முன், உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Amman ,
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்