உடுமலை, பிப். 13: குறைதீர் முகாமுக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் சிரமத்துக்கு உள்ளாயினர். உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களை சேர்ந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கோட்டாட்சியர் ரவிக்குமார் தலைமையில் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இம்முகாமில் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் அட்டையை பெறவும், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மாற்றுத்திறனாளிகள் வந்தனர். நடக்க முடியாதவர்களை உறவினர்கள் அழைத்து வந்தனர். ஆதரவு இல்லாதவர்கள் அவர்களாகவே சிரமப்பட்டு நடந்து வந்தனர். சிலர் படியேறி செல்ல முடியாமல் சோர்வுடன் படிக்கட்டில் அமர்ந்து விட்டனர்.