பழைய கோன் குடோனில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து நாசம்

திருப்பூர்,பிப்.11:திருப்பூர், முதலிபாளையம் பகுதியில் உள்ள பழைய கோன் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. திருப்பூர், முதலிபாளையம் ஊராட்சி, சிட்கோ அருகே உள்ள மீனாட்சி நகரில் வசித்து வருபவர் துரைபாண்டி (45). இவர் அதே பகுதியில்  பேப்ரிக் நூல் செகன்ட்ஸ் கோன் அட்டை, தையல் கோன் அட்டை குடோன் நடத்தி வருகிறார். இவரது குடோனில் நேற்று மதியம் திடீரென புகை எழுந்துள்ளது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அதனை பார்த்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனையடுத்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தெற்கு தீயணைப்பு நிலை அலுவலர் சண்முகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு இரண்டு வாகனங்களில் சென்று தீயை அணைத்தனர். இருப்பிலும் பல லட்சம் மதிப்பிலான நூல் கோன் அட்டைகள் தீயில் எரிந்து சாம்பலாகின. இது குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: