மதுரை, பிப். 7: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவை தொடர்ந்து நகரின் கிருதுமால் நதியின் எல்லை அளவீடு செய்து கழிவுநீர் கலப்பது, ஆக்கிரமிப்பு உள்ளிட்டவைகளை கணக்கிடும் பணி துவங்கியது. மதுரையில் வைகை நதிக்கு அடுத்த அதன் கிளையாக பெரிய நதியாக ஒடியது கிருதுமால் நதி. புராண சிறப்புமிக்க இந்நதி வைகையின் தென் பகுதி மக்களுக்காக உருவானது. இந்த நதி துவரிமானின் கண்மாய் பகுதியில் உற்பத்தியாகி அச்சம்பத்து, விராட்டிபத்து, பொன்மேனி, எல்லீஸ்நகர், தெற்குவாசல், கீரைத்துறை, சிந்தாமணி வழியாக மதுரையை கடந்து கரிசல்குளம், கொந்தகை கண்மாயை அடைந்து கீழவலசை என்ற இடத்தில், குண்டாற்றில் கலக்கிறது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் 200 கிமீ தூரம் இந்நதி பயணிக்கிறது.. வைகையில் வெள்ளம் வரும்போது, இந்த நதியிலும் வெள்ளம் ஓடியுள்ளது. விரகனூர் மதகு அணைக்கு முன்பாக உள்ள வடிகால் வழியாக பாயும் உபரிநீர் கிருதுமால் நதிக்கு சென்று, பல்வேறு கண்மாய்கள் மூலம் 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலம் பயன்பெற்றது. 30 ஆண்டுகளுக்கு முன் நிலத்தடி நீருக்கும், பாசனத்துக்கும் பயன்பெற்ற கிருதுமால்நதி, தற்போது சீரழிந்து கிடக்கிறது. மதுரை நகரில் மட்டும் இந்த நதி முன்பு 120 அடி அகலத்தில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் ஓடுகிறது.