களக்காடு, பிப்.7:திருக்குறுங்குடி பகுதியின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியே பிழைப்பு நடத்தி வருகின்றனர். திருக்குறுங்குடி சுற்று வட்டாரத்தில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் விவசாயிகள் நெற்பயிர் பயிரிட்டிருந்தனர். தற்போது இயந்திரங்களின் மூலம் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் நெல் அதிகளவில் அறுவடை செய்யப்பட்டாலும். போதிய விலையின்றி விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். திருக்குறுங்குடியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததால் வியாபாரிகளிடமே நெல்லை விற்க வேண்டிய கட்டாய நிலை நிலவுகிறது. 150 கிலோ சிறிய ரக நெல் ரூ.2 ஆயிரத்திற்கும், பெரிய ரக நெல் ரூ.2,200க்கும் விற்பனையாகிறது. இது விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லாததால் பெருமளவில் இழப்பும் ஏற்படுகிறது. நெல் அறுவடை இயந்திரத்தின் வாடகை ஒரு மணிக்கு ரூ.2,200 லிருந்து ரூ.3,000 வரை கொடுக்க வேண்டியதுள்ளது. மேலும் இடு பொருட்கள் செலவுகளை காட்டிலும் குறைவான தொகையை கிடைப்பதாக விவசாயிகள் கவலை அடைந்தனர்.
எனவே விவசாயிகளின் நலன் கருதி திருக்குறுங்குடியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.