செய்யூர், பிப்.6: செய்யூர் தாலுகாவில் நேற்று 2 கிராமங்களில் நடக்க இருந்த கிராம சபை கூட்டங்களை, கிராம மக்கள் மீண்டும் புறக்கணித்ததோடு, அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த குடியரசு தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடந்தன. இதில், சில ஊராட்சிகளில் உள்ள கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக கிராம சபை கூட்டம் புறக்கணிக்கப்பட்டது. இதையொட்டி, செய்யூர் தாலுகா லத்தூர் ஒன்றியம் கொடூர் ஊராட்சி கருக்காமலை கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஊராட்சிக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட நிதியில் ஊழல் நடந்திருப்பதை காரணம் காட்டி, அப்பகுதி மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இந்நிலையில், நேற்று காலை அந்த கிராமத்தில் மீண்டும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊராட்சி செயலாளரிடம், ஊராட்சி பணிகள், வரவு செலவு கணக்கு குறித்து கேட்டனர். அதற்கு அதிகாரிகள் தரப்பில் முறையான பதில்கள் வரவில்லை.