விருதுநகர், ஜன.31: விருதுநகர் நகராட்சி கோடை கால நீர்தேக்கங்களில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளதால் கோடை மழை பெய்தால் மட்டும் குடிநீர் விநியோகம் முறையாக செய்ய முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. விருதுநகர் நகராட்சியில் உள்ள 80 ஆயிரம் மக்களுக்கான தண்ணீர் தேவையை ஆனைக்குட்டம் அணையின் வெளிப்புற கிணறுகள், ஒண்டிப்புலி, காருசேரி கல்குவாரிகள், கோடைக்கால நீர்தேக்கம், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் பூர்த்தி செய்கிறது. தற்போதைய நிலவரப்படி ஆனைக்குட்டம் அணை வறண்டு கிடக்கிறது. வெளிப்புற கிணறுகள் மூலம் தினசரி 24 லட்சம் லிட்டர் தண்ணீரும், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து 22 லட்சம் லிட்டர் தண்ணீரும் கிடைக்கிறது. இதன் மூலம் 6 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வழக்கமாக 100 அடி ஆழம், 400 மீட்டர் நீளமுள்ள ஒண்டிப்புலி குவாரியில் 80 முதல் 90 அடி மழை நீர் தேக்கி வைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மே முதல் செப்டம்பர் வரையிலான தண்ணீர் தேவைக்கு பயன்படுத்தப்படும்.