மதுரை, ஜன.21: மதுரை அரசு மருத்துவமனையில் மூச்சுக்குழாய் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு அறுவை சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட பகுதி அகற்றப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த விவசாயி கேசவன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலைக்கு முடிவு செய்து, பூச்சிக் கொல்லி மருந்தை குடித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றார். நீண்டநாள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார். இந்நிலையில் கடந்த மாதம் இவர் மூச்சு விடுவதில் பெரும் சிரமத்திற்குள்ளானார். இதனால் கேசவன் மீண்டும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இங்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததில், அவரது மூச்சுக்குழாயில் புண் ஏற்பட்டு சுருங்கி இருப்பது தெரியவந்தது. புண்ணாகி உள்ள மூச்சுக்குழாயின் பகுதியை அகற்ற முடிவு செய்யப்பட்டது.