மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஈரோடு, ஜன.19: ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் ராமசாமி (57). இவர், தனியார் மில்லில் தங்கி பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு மொழிபெயர்பாளராகவும், வழிகாட்டியாகவும் இருந்து வந்தார். இந்நிலையில், நஞ்சனாபுரத்தில் இருந்து பவளத்தாம்பாளையத்திற்கு நேற்று வடமாநிலத்தவர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரி ஓட்டுநரின் இடது புற இருக்கையில் ராமசாமி அமர்ந்திருந்தார். ஆண்டிக்காடு என்ற பகுதியில் லாரி சென்ற போது  அப்பகுதியில் தாழ்வாக இருந்த மின்கம்பி லாரி மீது உரசியது. இதில், லாரியில் அமர்ந்திருந்த ராமசாமி மீது மின்சாரம் தாக்கி கீழே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு தாலுகா போலீசார் ராமசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: