கிருஷ்ணகிரி, ஜன.13: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் மட்டும் எருதாட்டம் நடத்த வேண்டுமென ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் உத்தரவிட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகையினையொட்டி எருது விடும் விழா நடத்துவது வழக்கம். இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்து பேசியதாவது: பொங்கலை முன்னிட்டு அனுமதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் மட்டும் எருது விடும் விழாவை நடத்த வேண்டும். வேறு இடங்களில் நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்தினால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்றே எருது விடும் விழா நடத்த வேண்டும். அனுமதி பெறாமல் விழா நடத்த ஏற்பாடு செய்பவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். விழாவை நடத்த வருவாய்த்துறை, காவல்துறை, மருத்துவத்துறை மற்றும் தீயணைப்பு துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளை கொண்டு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். மேலும், இக்குழுவில் எருதுவிடும் விழாவை மேற்பார்வையிட தேர்ந்த விவசாய நிபுணர்கள், அரசு சாராத சமூக சேவகர்கள், கொடையாளர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் ஆகியோர் நடுநிலை தணிக்கை குழுவில் இடம் பெறுவார்கள்.