சூளகிரி, ஜன.10: சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 25 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த 30ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் திமுக-5, அதிமுக-11, தேமுதிக-2, சுயேச்சை-7 இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த 6ம் தேதி பிடிஓ அலுவலகத்தில் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. பதவியேற்பு முடிந்த சிலமணி நேரத்தில், சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் மது (எ) ஹேம்நாத்தின் மனைவி ஒன்றியக்குழு உறுப்பினரான லாவண்யா, தலைவராக வேண்டும் எனக்கூறி, அவரையும் அவருடன் 14 உறுப்பினர்களையும் பெங்களூரு அழைத்து சென்று சொகுசு விடுதியில் தங்க வைத்தனர். இந்நிலையில், நாளை(11ம் தேதி) ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடக்கிறது. ஒன்றிய குழு தலைவர் பதவியை பிடிக்க, மேற்கு ஒன்றிய செயலாளர் மது (எ) ஹேம்நாத் தரப்பிலும், சூளகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் தாயப்பன் தலைமையிலான அணியினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் தலைவர் பதவி லாவண்யாவிற்கு கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.