தர்மபுரி, ஜன.8: தர்மபுரி பிடமனேரி குடியிருப்பு சாலையில் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி இலக்கியம்பட்டி ஊராட்சி பிடமனேரி கோவிந்த வர்மா தெருவில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவின் சாலையின் இருபுறங்களிலும் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் வசதி உள்ளது. சாக்கடை கால்வாய் வழியாக செல்லும் கழிவுநீர் பிடமனேரி ஏரியில் கலக்கிறது. பிடமனேரி சுற்றுவட்டாரத்தெருக்களில் இருந்து வரும் கழிவுநீரும், இந்த தெருவின் வழியாக தான் செல்கிறது. சாக்கடை கால்வாய்கள் இருபுறமும் ஆக்கிரமிப்பினாலும் குருகியது. இதனால் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடி குட்டைபோல் சாலையில் தேங்கி நிற்கிறது. நேற்று முன்தினம் சாலையில் கழிவுநீர் குளம்போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.