கிருஷ்ணகிரி, ஜன.7: கிருஷ்ணகிரி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ₹26 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு குட்கா பொருட்கள் கடத்தப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தொடர் வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, பல்வேறு இடங்களுககு கொண்டு செல்லப்படுவதாக, ஏடிஎஸ்பி சக்திவேலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையிலான போலீஸார், நேற்று இரவு கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு ஆடவர் கல்லூரி அருகே தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே அதிவேகமாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். வேனில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பண்டல், பண்டலாக இருந்ததை கண்டறிந்தனர்.