சென்னை: அனைத்து ரயில் நிலையங்களிலும் கழிப்பறை அமைக்க வேண்டும், என மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் மனு அளித்துள்ளார்.மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் நேற்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் பொது மேலாளர் ஜான்தாமசை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்து பேசியுள்ளேன்.ரயில் விபத்துகள், தற்கொலைகளில் உயிரிழந்த உடல்களை மீட்கும் பணியை தனது வறுமை சூழலிலும் 30 ஆண்டுகளாக செய்து வரும் முருகனை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நேரில் வரவழைத்து சந்தித்தார். இதையடுத்து, முருகனுக்கு அரசு பணி கிடைக்க உதவி செய்யுமாறு என்னிடம் வலியுறுத்தினார். இதுபற்றி தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.