கிருஷ்ணகிரி, டிச.27: போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்டுள்ள பஞ்சாப் மாற்றுத்திறனாளி நேற்று கிருஷ்ணகிரி வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியைச் சேர்ந்தவர் குல்தீப் ராதோடு(53). போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான இவர், கடந்த 2008ம் ஆண்டு தனது மனைவியின் மறைவிற்கு பிறகு போதை பொருட்களுக்கு எதிராக நாடு முழுவதும் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஏப்ரல் 1ம் தேதி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து பேட்டரியால் இயங்க கூடிய மோட்டார் சைக்கிளில் பயணத்தை துவங்கிய அவர் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களை கடந்து நேற்று தமிழகம் வந்தார். ஓசூரில் இருந்து நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தடைந்த குல்தீப் ராதோடுவிற்கு சென்னை பைபாஸ் சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் அருகில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வரவேற்பளித்தனர்.