தென்காசி, டிச.27: தென்காசி அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு எதிர்ப்புறம் உள்ள ராஜகோபாலபேரி குளத்தை தூர்வாரி அழகுபடுத்துவதுடன், பேவர் பிளாக் தளம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி புதிய பஸ்நிலையம் அருகே அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. மேலும் சக்திநகர், காளிதாசன்நகர், கே.ஆர்.காலனி, சிவந்திநகர், சித்ராநகர், ஜமாலியாநகர் அண்ணாநகர், குத்துக்கல்வலசை, ரயில்நகர், திருநகர், மங்கம்மாள் சாலை, குறிஞ்சிநகர், குடிசை மாற்று வாரியம், எழில் நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் அரசு ஊழியர்களும், ஓய்வுபெற்ற அரசு பணியாளர்களும் வசித்து வருகின்றனர். இங்கு போதுமான இடவசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும், ரயில் நிலைய நடைமேடைகளிலும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. வேகமாக வரும் வாகனங்களால் விபத்துக்குள்ளாக நேரிடுகிறது.