ராதாபுரம், டிச.27: ராதாபுரம் பகுதியில் கொட்டப்பட்டுள்ள கெமிக்கல் கழிவுகளை தின்ற ஆடுகள் பரிதாபமாக இறந்தன.கேரளாவில் இருந்து கோழி கழிவுகள் மற்றும் அபாய மருத்துவக்கழிவுகள் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆலங்குளம், பணகுடி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் பாலங்களில் வீசப்பட்டு வருகின்றன. ஆலங்குளம், பணகுடி பகுதியில் கழிவுகளை கொட்டும் போது பொதுமக்கள் லாரிகளை சிறைப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருப்பினும் சாலையோரங்களில் கழிவுகள் கொட்டுவது தொடர்ந்தது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் துர்நாற்றத்தை அனுபவிக்கின்றனர். இந்நிலையில் கூடங்குளம் செட்டிக்குளம் அருகேயுள்ள ரங்கநாராயணபுரத்தில் சில தினங்களுக்கு முன் 2 கேரள மாநில லாரிகள் கழிவுகளை கொண்டு வந்துள்ளன. இதனை அப்பகுதி மக்கள் மறித்து சிறைபிடித்தனர். லாரியில் கொண்டு வரப்பட்ட சுமார் 30 டன் அளவிற்கு கோழி கழிவுகளும், குப்பைகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 2வது நாளும் வந்த ஒரு கேரள கழிவு லாரியை பொதுமக்கள் பிடித்தனர். கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜெகதா மற்றும் போலீசார் லாரி டிரைவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.