சென்னை: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மோதிலால் (35). இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன், மதுராந்தகம் அருகே உள்ள செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட பவுஞ்சூர் பகுதியில நகைக்கடை துவங்கினார். அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது கடையில் தீபாவளி சீட்டு உள்ளிட்ட பல்வேறு நகை சீட்டுக்கள் நடத்தியுள்ளார். ஆண்டுதோறும் இவர் தீபாவளிக்கு முந்தைய வாரமே, தன்னிடம் சீட்டு கட்டியவர்களுக்கு நகை, பட்டாசு மற்றும் மளிகை பொருட்களை கொடுத்துவிடுவது வழக்கம். இதனால், ஏராளமானோர் இவரிடம் தீபாவளி சீட்டு கட்டி வந்தனர். அதன்படி, இந்தாண்டு செய்யூர், பவுஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 850க்கும் மேற்பட்டோர் இவரிடம் தீபாவளி சீட்டு கட்டியுள்ளனர். அவ்வாறு பணம் கட்டியவர்கள், தீபாவளிக்கு முந்தைய நாட்களில், நகை உள்ளிட்ட பொருட்களை கேட்டு, படையெடுத்தனர். அப்போது மோதிலால், பட்டாசு மற்றும் மளிகை பொருட்களை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கொடுத்திருக்கிறார்.